உடுமலை அமராவதி அணை பாசனம் மூலமாக, திருப்பூர், கரூர் மாவட்டத்துக்குட்பட்ட, 55,000 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில், உடுமலை, மடத்துக்குளம் பகுதியிலுள்ள ராமகுளம், கல்லாபுரம், கொமரலிங்கம், சர்க்கார்கன்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு ராஜவாய்க்கால் பாசனத்தில், இரு போகமாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் சாகுபடிக்குட்பட்ட இடைவெளியில், உளுந்து, பாசிப்பயறு, எள் உள்ளிட்ட சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.
நடப்பாண்டு, கணியூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக உளுந்து சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை நடக்கிறது. உளுந்தை பிரித்தெடுக்க, உலர்களங்களில் செடிகள் குவித்து வைத்துள்ளனர்.
“இரு போகம் மட்டுமே நெல் சாகுபடி செய்கிறோம். வருவாய்க்காக இடைப்பட்டத்தில், உளுந்து விதைக்கிறோம். தொழிலாளர் பற்றாக்குறையால் உளுந்து அறுவடைக்கு சிரமப்பட வேண்டியுள்ளது. அதிக செலவு செய்தாலும், உளுந்துக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இந்த முறை முன்னதாகவே அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. எனவே, உளுந்து செடிகளை முன்னதாகவே அறுவடை செய்ய வேண்டிய கட்டாயம். இதனால் மகசூல் குறைந்துள்ளது. எனவே அரசு, ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் வாயிலாக, உளுந்தை நேரடி கொள்முதல் செய்ய வேண்டும். விதைப்பின்போது, வேளாண்துறை வாயிலாக உளுந்து விதை மற்றும் இடுபொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும்” என்கிறார்கள் விவசாயிகள்.