Online News Portal on Agriculture

அதிக லாபம் வேண்டுமா? ‘இ-நாம்’ மூலம் விற்பனை செய்யுங்க…

0 34

மத்திய அரசின் ‘இ-நாம்’ எனப்படும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில், நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில், இணையதளம் வாயிலாக விவசாய விளைபொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. இதனால், நாட்டின் எந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகளும் ஏலம் கோர முடிகிறது. விவசாயிகளுக்கும் உரிய விலை கிடைக்கிறது. அவ்வகையில், தமிழகத்தில் 157 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ‘இ-நாம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், உடுமலை, பெதப்பம்பட்டி, வெள்ளகோவில், மூலனூர், மடத்துக்குளம், காங்கயம், பொங்கலூர், சேவூர் ஆகிய ஒன்பது ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்ட விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை ‘இ-நாம்’ திட்டத்தில் விற்பனை செய்ய கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ‘இ-நாம்’ திட்டத்தில், பண்ணை வாயில் வணிகம் என்கிற முறையை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. விவசாயிகள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்றுக்கூலி, போக்குவரத்து செலவினம் தவிர்க்கப்படும்.

ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்கள், விவசாயிகளின் இருப்பிடம், தோட்டத்துக்கே நேரில் வந்து, ‘இ-நாம்’ செயலி வாயிலாக விளைபொருட்களை விற்பனை செய்து தருகின்றனர். விளைபொருளுக்கான தொகை, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். விவசாயிகள் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள அணுகி ‘இ-நாம்’ மற்றும் பண்ணை வாயில் வணிகம் வாயிலாக விளைபொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து பயன்பெற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.